June 26, 2025

மானாமதுரை – ராஜகம்பீரத்தில் பள்ளிக்கல்விதுறை&மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து நடத்திய மருத்துவமுகாம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் ராஜ கம்பீரத்தில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் நேற்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெற்றது. இம்மருத்துவ முகாமில் கண் மருத்துவர், காது மூக்கு தொண்டை மருத்துவர், மனநல மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர், முட நீக்கியல் மருத்துவர், கண் பரிசோதகர், காது பரிசோதகர் ஆகியோர் கலந்துகொண்டு மாற்றுத்திறன் மாணவர்களை பரிசோதித்து மாற்றுத்திறன் மாணவர்களுக்கான அடையாள அட்டையை பரிந்துரைத்தனர். மருத்துவர் பரிந்துரையை ஏற்று, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் பாலகிருஷ்ணன் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு அடையாள அட்டை, யூ டி ஐ டி அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இம் மருத்துவ முகாமில் மாற்றுதிறன் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் கலந்து கொண்டனர். இவர்களில் புதிய அடையாள அட்டை50 பேரும், பழைய அட்டையை புதுப்பித்தலில் 10 பேரும், புதிய பேருந்து பயணச்சலுகை பெற்றவர்கள் 10 பேரும், இரயில் பயணச் சலுகை பெற்றவர்கள் 17 பேரும் பயனடைந்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட உதவி திட்ட அலுவலர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், பள்ளி தலைமை ஆசிரியர், வட்டார கல்வி அலுவலர்கள் வட்டார வளமைய மேற்பார்வையாளர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலக பணியாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பு பயிற்றுநர்கள், இயன்முறை மருத்துவர்கள், SMC கணக்காளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மானாமதுரை வைரம் அரிமா சங்கத்தினர் மதிய உணவு வழங்கினர்.மானாமதுரை வட்டார வளமைய மேற்பார்வையாளர் இராமையா, வட்டார ஒருங்கிணைப்பாளர் அனிதா, சிறப்பு பயிற்றுநர்கள் ஜான்சி, ஜூலியட், விக்டர் இயன்முறை மருத்துவர் நாகராஜன் ஆகியோர் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.