June 26, 2025

கல்வி நிதி ரூ.2,152 கோடி நிறுத்திவைப்பு: மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு – 

மத்திய அரசு, சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் 2000 கோடி ரூபாய்க்கும் அதிகமான கல்வி நிதியின் ஆண்டு பங்கினை நிறுத்தியிருப்பதாக குற்றம் சாட்டி, உச்ச‌ நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடுத்துள்ளது, “சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் 2025-2026ம் ஆண்டுக்கான கட்டாய 60% பங்களிப்பாக தமிழ்நாட்டுக்குச் சுமார் 2,152 கோடி ரூபாய் வழங்கப்படவில்லை. இது சமக்ரா சிக்ஷா திட்டம், கல்வி உரிமைச் சட்டம் 2009 அமலாக்கத்தை கடுமையாக பாதித்துள்ளது.நிதி பற்றாக்குறை காரணமாக மாநிலத்தில் 43,94,906 மாணவர்கள், 2,21,817 ஆசிரியர்கள் மற்றும் 32,701 ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திட்ட அமலாக்க ஆணையத்தின் ஒதுக்கீட்டின்படி‌ மொத்தமாக 3585.99 கோடி ரூபாய் இந்த திட்டத்தில் செலவிடப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கூறுகிறது.தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர் சபரிஷ் சுப்ரமணியன் மூலம் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, சமக்ரா சிக்ஷா திட்டமானது, தேசிய கல்விக் கொள்கை 2020,‌ பி.எம். ஸ்ரீ பள்ளிகள் திட்டம் ஆகியவற்றோடு எந்த வகையிலும் தொடர்புடையது அல்ல என்று கூறுகிறது.சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் நிதி பெறுவதற்கான மாநிலத்தின் உரிமையை மத்திய அரசு தடுத்து வைப்பதன் மூலம் கூட்டுறவு கூட்டாட்சி என்ற கொள்கையை புறக்கணிக்கிறது. கல்வி நிதியை நிறுத்துவதானது, கல்வி (பட்டியல் III, உள்ளீடு 25) தொடர்பாக சட்டம் இயற்றுவதற்கான மாநிலத்தின் அரசியலமைப்பு அதிகாரத்தை கையகப்படுத்துவதற்கு சமம். மத்திய அரசு மாநிலம் முழுவதும் தேசிய கல்விக் கொள்கை -2020-ஐ முழுமையாக அமல்படுத்தவும், மாநிலத்தில் பின்பற்றப்படும் கல்வி முறையிலிருந்து விலகவும் மாநில அரசை கட்டாயப்படுத்த முயல்கிறது,” என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது”