June 26, 2025

உன்னை நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையானே கிரிவலமும் மகாதீப தரிசனமும்…

உன்னை அடிமுடி தேடிய பிரம்மனுக்கும் திருமாலுக்கும் பெரும் ஜோதியாக – லிங்கோத்பவராக பரமன் காட்சி தந்த இத்திருத்தலம திருவண்ணாமலை. மலையே சிவலிங்கமெனத் திகழும், நினைத்தாலே முக்தி தரக்கூடிய, இத்தலத்தில், திருப்பாதம் பதிக்காத மகான்களே இல்லை எனலாம். திருவண்ணாமலையில் திருநாள் திருக்கார்த்திகை! கணவனும் மனைவியும் ஒற்றுமையாக வாழ வேண்டும் இருவரும் சமமானவர்கள் என்ற கருத்தை வலியுறுத்தி சிவபெருமான், பார்வதிதேவிக்கு தன் உடலின் சரிபாதியை வழங்கி, அர்த்தநாரீஸ்வரராகக் கோலம் பூண்டார் அல்லவா… அந்த நன்னா ளும் திருக்கார்த்திகைதான்; அப்படி அர்த்தநாரீஸ்வரராகக் காட்சி தந்ததும் திருவண்ணாமலையில்தான்!அவ்வகையில், ‘அருந்தவம் இருந்து, சிவ பெருமானின் இடப் பாகம் பெற்றதற்கு நன்றி கூறவே திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீப விழாவை உண்ணாமலை அம்மன் தொடங்கி வைத்தாள்’ என்று அருணாசலப் புராணம் கூறுகிறது.மகத்துவம் வாய்ந்த திருவண்ணாமலையில் தீபத்திருநாளில் முக்கியத்துவம் பெறும் இரண்டு விஷயங்கள், கிரிவலமும் மகாதீப தரிசனமும். பௌர்ணமி – கிரிவலத்துக்கு உகந்த நாள் என்பார்கள். ஆனாலும், திருக்கார்த்திகை முதலான திரு நாட்களில் கிரிவலம் வருவது, மிகுந்த பலனைத் தரும் என்பது உறுதி.

கிரிவலம் தரும் பலன்கள்:

கிரிவலத்தின் மகிமையைப் பெரிதும் சிறப்பிக்கின்றன ஞானநூல்கள். ஓர் அடி எடுத்து வைத்தாலே பலன் உண்டாம்! ஓரடிக்கு மனதால் நினைத்த பாவமும், ஈரடிக்கு சொல்லால் செய்த பாவமும், மூன்றடிக்கு உடலால் செய்த பாவங்களும் தொலையும். அதேபோல், உச்சிக் காலத்தில் கிரிவலம் வந்தால், நினைத்தது நிறைவேறும்; மாலையில் வந்தால், செல்வம் தழைக்கும்! ஞாயிற்றுக்கிழமை கிரிவலம் வந்தால், தீராத நோயும் தீரும்; திங்கட்கிழமை கிரிவலம் வந்தால், பாவங்கள் மொத்தமும் தீரும் என்கின்றன ஞானநூல்கள்.அதேபோல், தீபத் திருநாளில், இறைவனையும் இறைவியையும் மனதார தியானித்து, மகா தீபத்தைத் தரிசித்தபடி கிரிவலம் வந்தால், கோடி பலன்கள் கிடைக்கும்; இப்பிறவியிலான அனைத்துப் பாவங்களும் நீங்கி, புண்ணிய பலனைப் பெறுவார்கள் என்கின்றன புராணங்கள்.

மகாதீப தரிசனம்:

தீபத் திருநாளன்று அதிகாலையில், மலையடிவாரத்தில் ஏற்றப்படுவது- பரணி தீபம்; மாலையில் மலையுச்சியில் ஏற்றப்படுவது மகாதீபம்.மகாதீப தரிசனம்;மகாதீபத்துக்கு 200 கிலோ நெய், 1 டன் திரி ஆகியவை பயன்படுத்தப் படுகின்றன. மகாதீபத்துக்கான வெண்கலக் கொப்பரை, கி.பி.1745-ஆம் ஆண்டு, மைசூர் சமஸ்தான அமைச்சரான வெங்கடபதிராயனால் வழங்கப்பட்டது. மலை மேல் தீபம் ஏற்ற உரிமை பெற்றவர்கள் ‘பர்வத ராஜ குலம்’ எனப்படும் மீனவ குலத்தவர். ஆலயத்தின் தீப தரிசன மண்டபத்தில், பஞ்ச மூர்த்திகள் தனித்தனி சப்பரங்களில் எழுந்தருள, அர்த்தநாரீஸ்வரர் தரிசனத்துடன், மகாதீபம் ஏற்றப்படும்!